Monday, 12 April 2021

செத்துவிடவில்லை

செத்துவிடவில்லை
நான் 
இன்னும்
செத்துவிடவில்லை.

பல நூறு யோசித்து
பலவாறாய் நேசித்து
பற்பலவாய் யாசித்து
பல்லாயிரமாய் பிரிந்து
பிரளயமாயமானது
மனது.

கனவுகளில்
கோட்டை கட்டி
வானில் பறக்க
நாட்டையாள
கற்ற கல்வி
உற்று
உலகம் சுற்ற.

அவளாய் இவளாய்
பிடித்த பாத்திரத்தில்
தன்னைப் பொருத்தி
கற்பனையிலே
அரிதாரமெடுத்ததென்ன
"நின்று கொண்டு
கனவு காண்"
என்ற என்ற
போதனைைைய மீறி!

தொட்டுவிடும்
தூரம் தான்
வானம்
என்ற சொலவடை 
உண்மையென நம்பி. 

தொடவில்லை
வானத்தை
தொட முடியவில்லை
வாழ்க்கையின்
வேகத்தை

பிடிபடாததால்,
அதற்கு
என்னைப்
பிடிக்காததால்.

இருப்பினும் 
இச்சிறிய
காகிதம் தாங்கும்
எனது பெயர்

மழைத்துளி பட்ட
வேராய்
சிலிர்த்து
துளிர்கிறது.

Saturday, 27 March 2021

இடுகாடு

 நிலையாமையை

நிலைத்து

நித்தமும் 

நினைவூட்டும்

தானியங்கி எரிவாயு

கூடம். 


நம்மை

தன்னில்

உள்வாங்கி

விரல்

சொடுக்கிய

வினாடியில்

விடைதெரியா

வாழ்க்கையின்

எச்சத்தை

வெளித் தள்ளி.


ஊர் கோடியின்

மயானத்தில்

அமைதியாய்

நின்றிருக்கும்

தகர கொட்டாய்


நகர 

நெரிசலினிடையே

இடுக்கி கொண்டு

பிறவிப் பெருங்கடலை

நித்தமும் நீந்தும்

மானிட இனத்தின்

நிலையாமையின்

நினைவு சின்னமாய்

நிற்கிறது

 இந்த

மின் இடுகாடு.

வெளிகள்

 அண்ட வெளி

பால் வெளி

வெட்ட வெளி


வெளிகள் எல்லாம்

வெளிச்சங்கள்


பிண்டங்கள்

மட்டும்

இருளிருளாய்.