Tuesday, 25 October 2016

மழை வருமோ ....


மழை வருமோ ...


மழைக்காலம் 
வருமென்று 
கிளை கழித்து 
மரம் வெட்டி 

கீற்று மாற்றி 
ஓடு வேய்ந்து 

உளுந்து பயிறு 
வத்தல் வடாம்
பக்குவப்படுத்தி 

வீட்டின்
உள்ளும் புறமும்   
சரிபார்த்து 

மழைக்கு   
காத்திருந்து  
நாங்கள் 
தயாரானோம் 

ஆனால் 

மழை வர வில்லை  
மழை
வரத் தயாரில்லை. 



Tuesday, 4 October 2016

ஜவுளி கடை பொம்மை

கருப்பு வெள்ளையாய்
சிறிதும் பெரிதுமாய்
அணிவகுப்பில்
மனித
உருவங்கள்.

வானவில் வண்ணங்களில்
உடை அணிந்து
நின்ற இடத்தில்
பேஷன் ஷோ
நித்தமும்.

தூரப் பார்வையில்
எவ்வளவு  பொம்மைகள்
என
விழி அகல
வியந்து
திரும்பிய போது
சட்டென நகர்ந்தது
ஒரு உருவம்.


Friday, 15 July 2016

என் சக்தி ....

விழி  மூடி
மனம் குவித்து
ஓம் சக்தி
என சொல்லும்
ஒவ்வொரு முறையும்
நிழலாடுகிறது
ஒரு முகம்.

அபிராமி லலிதா
காளி மாரி
என
அறிந்த
அனைத்து ரூபங்களும்
பொருந்தா முகம்.

ஞாபக
அடுக்கின்
இறுதி வரை
சென்று திரும்பியும்
வாரா .....

நினைவலைகளை
பின்னுக்கு
தள்ளிவிட்டு
சட்டென உணர்தேன்
என் சக்திக்கு
நானே
முகம்
கொடுத்திருந்ததை.






Wednesday, 11 May 2016

பிடிக்க மறந்து......

பிடிக்க மறந்து...

அவர்களுக்குப் பிடிக்காதென்று
அதை மறந்து
இவர்களுக்குப் பிடிக்காதென்று
இதை மறந்து,
அதுவும் இதுவும்
அவைகளாய் இவைகளாய்,
எல்லோருக்கும்
பிடித்ததாய்
இருக்க முயன்று
எனக்குப் பிடித்ததாய்
இருக்க
மறந்தேன்.