Sunday, 26 May 2019

ஜன்னல்...

நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று இரவு வாக்கிங் சென்றேன். இரவு நேர வாக்கிங் மனதுக்கு பிடித்தமான ஒன்று. வாக்கிங் செல்லும்போது தெருவோரம் இருக்கும் வீடுகளை பார்த்துக்கொண்டே நடந்தேன்.  பிரமிப்பு ஒரு பக்கம் வருத்தம் ஒரு பக்கம்.  பெரிய இரண்டடுக்கு மாடி வீடு அருகில் மிகச்சிரியதாய் ஒண்டுகுடித்தனம்.  ஒரே தெருவில் இருந்தாலும், நம் நாட்டில் வீடுகளின் அளவும் அழகும் மாறுபடும். பல வெளி நாடுகளில் ஒரே மாதிரி வடிவமைப்புடன் வரிசையாய் வீடுகள் இருக்கும். அது அங்கு உள்ள சட்டம். நம் வீடுகள் போன்றே நம் சட்டங்களும்.

சினிமாவில் மிக பிரபலமான தயாரிப்பாளரின் பெயர் தாங்கிருந்தது அந்த வீடு. வீடு என்பது சாதாரணமான ஒரு வார்த்தை, ஒரு குறியீடு. இருப்பிடம் வீடு என்றால் அது வீடுதான். மற்றபடி நம் கண்களுக்கும், நினைவிற்க்கும் பழகிப்போன ஒன்றிலிருந்து வேறுபட்ட கட்டிடம். அவர்களுக்கு அது வீடு. ஒன்றரை ஆளடி உயரம் சுற்றுச்சுவர்.  உள்ளே, இரண்டடுக்கு மாடி. கட்டிட அமைப்பில் சற்று வித்யாசத்தை உணர்ந்து, மறுபடி நோக்கினேன். ஜன்னல் இல்லா வீடு. பளிரென வெள்ளை நிறம் போர்த்தியபடி.

என் வீட்டை சுற்றி மரம், செடி, கொடி, சில நேரம் பராமரிப்பின்றி. நான் வீட்டிலிருந்தால் எல்லா ஜன்னல்களும் திறந்து இருக்கவேண்டும். என் அத்தை திட்டிக்கொண்டே இருப்பார், விஷ ஜந்துக்கள் (புரிகிறதா?) நடமாட்டம் இருக்கும் என. நேற்று கூட போனில் பேசும்போது சொன்னார், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வராண்டாவில் படுத்து இருந்ததது என்று. உலகத்தில் நான் பயப்படும் ஒரே விஷயம் அது ஒன்றுதான்.

மின் வெட்டு இருக்கும் நேரங்களில், கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு எல்லா ஜன்னல்களையும் திறந்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். காற்றோட்டம் இல்லாமல் என்ன?  காற்று வேறு, காற்றோட்டம் வேறு.  நம்மில் பல பேருக்கு வித்யாசம் தெரிவதில்லை. 

நகரத்தில், சென்னை மாநகரத்தில்,  விஷ ஜந்துக்கள்  நடமாட்டம் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அதைவிட ஆபத்தான ஜந்துக்கள் இருப்பதாலோ?
எது எப்படி இருப்பினும், ஜன்னல் இல்லா வீடு எப்படி வீடு என்ற உணர்வை தரும்? மனது அயர்ந்த நேரத்தில்,  துவண்ட நேரத்தில், தன்னை மறந்து நிற்க, ஒரு ஜன்னல். எதிர் வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் குருவி,  ஒற்றை தென்னை மரம், அதனடியில், உச்சி வெயிலில் துணி அயன் பண்ணும் அம்மா,  என எதாவது ஒன்று. 

உலகை உணர, அகமும் புறமும் அறிய, தன்னிலை மீள என ஜன்னல்கள் என் வீட்டில்.    
               





















Saturday, 25 May 2019

ஜன்னலில்லா வீடு


ஜன்னல் வாயிற்படி
இவையிரண்டும்
இரு கண்ணாய் வீட்டுக்கு.

ஒன்றாவது திறந்து
ஒற்றை கண்ணாய்
வழிவிடும் காற்றுக்கு
பல வீடுகளில்.

தியானத்திலிருந்து
மீண்டு
எப்போவாவது 
திறந்து மூடும்
ஒற்றை கண்
சில வீடுகளில்

உயர்ந்த சுவற்றுடன் 
ஜன்னலில்லா
சில பெருந்தகைகள்
வீடு.

மூச்சு முட்டதோ?

காற்றாய்
புத்தி, அறிவு, ஞானம்.
காற்றே  உயிர்.   

எங்கள் வீட்டில்
இரண்டும் திறந்திருக்கும்
ஊர் உறங்கும் நேரம்
தவிர.

Thursday, 9 May 2019

சாம்பார் சாதமும் புளிகாச்சல் சைடிஷ்ம் ...

 தலைப்பிற்க்காக தமிழ். 

நீங்கள் சாம்பார் சாதம் ஆர்டர் பண்ணும்போது என்ன சைடிஷ் எதிர்பார்ப்பீர்கள்? அப்பளம், உருளை கிழங்கு, முட்டைகோஸ் பொரியல், எலுமிச்சை ஊறுகாய். இவைகளில் ஒன்றோ இரண்டோ, எதுவும் இல்லையென்றால் ஊறுகாயாவது.   

இன்று அருகிலுள்ள கல்லூரியில் பணி. எனக்கு வழக்கத்திற்கு மாறாய் வேறு ஒரு இடம் செல்வது அவ்வளவாக பிடிக்காது என்றாலும், கடமையை செய்ய வேண்டிய கட்டாயம்.  விருப்பு வெறுப்பிற்கும்,  முடியும் முடியாமைக்கும் இடம் இல்லை.  

இன்று வியாழக்கிழமை. காலை சாப்பாட்டிற்கு நோ. அளவிற்கு அதிகமாய் கால் வலி, கடுமையான வெயில், பசி, மூன்று மணி நேரம் நின்று கொண்டிருந்தது,  அனைத்தும் ஒன்று சேர்ந்தது. சில சமயம், ஏன் கஷ்டப்படுகிரோம் என்று தெரியமலே போய்விடுகிறது. உணர்வதுக்கு நேரம் இல்லை. அல்லது, நேரம் ஒதுக்குவது இல்லை. உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை பல சமயங்களில்.  

சில வேலைகள், ஒருவிதமான ஆயாசத்தை தந்து விடுகின்றன.  பிடிக்காத அல்லது இயலாத ஒன்றை - உடலுக்கு, மனதுக்கு, அறிவிற்கு, அல்லது ஆன்மாவிற்கு ஓவ்வாத வேலைகள் செய்யும்போது, தண்டனையாகவே மனது எண்ணுகிறது.

இறுதி தீர்ப்பு நாள் மாதிரி. தண்டைனையில்  இருந்து தப்பிக்க முடியாது. தண்டனையின் தீவிரமும், கால அளவும் மாறுமே தவிர.   

பேப்பர்களை கொடுத்தபிறகு, மத்திய உணவிற்கு சென்றோம். ஒரு அட்டைப்பெட்டி இருந்தது, அதில், சாப்பாட்டு பொட்டலங்கள் இருந்ததன. அருகில், சில சப்பாத்திகள் இருந்தன.  நாங்கள், சப்பாத்தியை எடுத்துக்கொண்டு தொட்டுக்கொள்ள எதாவது இருக்கிறதா என்று பார்த்தோம். ஒரு பாட்டில் இருந்தது. சந்தேகத்துடன் திறந்தேன். உள்ளே தக்காளித் தொக்கு. சிறிது எடுத்துக்கொண்டு அமர்தோம். சப்பாத்தி மிருதுவாய் இருந்தது. தொக்கு கெட்டியாக இருக்கும். இன்னும் இங்கே தண்ணீர் பற்றாக்குறை இல்லை போல்.  பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது, தொக்கு தீர்ந்து விட்டது. பாதி சப்பாத்தி வெறுமே சாப்பிட வேண்டியதாயிற்று.   ஒரு சாப்பாட்டு பொட்டலதை  பிரித்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்தோம். அதில் உள்ள
ஊறுகாயை எடுத்து நாக்கில் வைத்தேன்.  வித்யாசமான, புளி சாதத்திற்கான சுவை.   அடுத்த நொடி, வேர்க்கடலை கையில் பட்டதும், சந்தேகம் தீர்ந்தது.  

ஆச்சர்யம் ஆனால் உண்மை, வாழ்நாளில் முதன்முறையாக, சாம்பார் சாதத்திற்கு புளிகாச்சல் சைடிஷ்!  அப்பளமும், வறுவலும், வெங்காயமும் தேடிய நாள் எங்கே? நாவுதான் எங்கே?   எது எப்படியோ, பசித்த நாவிற்க்கு சாம்பார் சாதமும், புளிகாச்சலும்  தேவாமிர்தம்.   

வாழ்க்கையின் புற சூழ்நிலைகள் மிகசிரமமாகவே இருந்தாலும், எதையும் யாரிடமும் சொல்லி புரியவைக்க வேண்டிய நிலையை கடந்து,மனதோ, அமைதியாக இருந்தது, அனைத்தையும் வேடிக்கைபார்த்தபடி.