Saturday, 29 June 2019

- - - எனும் நான்.

மரணமும் போரும்
விடுதலையை தரும்
சில நேரம்
வெற்றியையும்.

மீட்கவே இயலாத
பொருளிழப்பை
நேரத்தை
மானத்தை
மரண வலியை
தந்தாலும்.

முட்களால்
குத்திக் கீறி
ரணமாக்கி
தன்னை வருத்தி
தன் வலி மறத்து
சதைப் பிய்ந்து
நாராய் தொங்க

ரத்தம்
சொட்ட சொட்ட
கோரைப் பற்கள்
நீண்டு
தன்னுரு
இழந்து மறந்து

நா தள்ளி
மூச்சிறைக்க
பலி கொள்ள
அலைந்து
அமைதியை
கிழித்து குலைத்து
இரைகளற்று,

தீமையும் தானும்
உருமருவி
ஒன்றாய்
அதுவே இதுவாய்
மீட்டெடுக்க இயலாது
உருக்குலைந்து
கோரமாய்

இறுதியில்
தான் வைத்த தீயில்
மெல்ல மெல்ல
தானே
இரையாகி
விட்டு
விடுதலையாகி
தீயின் நாவிற்கு
சுவையாகி

வலி மிகுந்த
வாழ்க்கையின்
எல்லை வரை
மீண்டும்
போராடி

மீளா துக்கத்தில்
ஆழ்த்தி
தோல்வியை தழுவி
வீழ்த்தும்
வல்லமை கொண்டேன்
- - - -  எனும் நான்.

Thursday, 27 June 2019

கண்ணாடி

அந்த வீட்டின்
அகண்ட கூடத்தில்
ஆளுயுர நான்.

என் முழு நேர பணி
பிரதிபலிப்பதே ,
உருவத்தை மட்டுமல்ல.

குறுக்கும் நெடுக்குமாக
அவ்வீட்டில் மக்கள்
நடக்கும் போது
அறிந்தும் அறியாதது போல
அவர்கள் பார்வை
என் மேல்.

அநேக நேரங்களில்
தன் உருவ அமைப்பே
மனதில்

சிகை திருத்தி
மீசை முருக்கி

வகிடெடுத்து
மையிட்டு.


எத்தனை பேர்
எத்தனை நாள்
பார்வை
என் மேல் .

ஆனால்
என்னை ஒரு தரமேனும்
ஏறிட்டுப்
பார்க்காது

என் இருத்தலையும்
தன் இருத்தலையும்
உணராத

உருவம் அழகு
எண்ணங்கள்
வண்ணங்கள்
என
வாழ்க்கையின்
சாரமற்று

என்னையும்
சாரம் போனதாய்.

ஒரு முறையேனும்
ஏறெடுத்துப் பார்க்காத
அவளின்
மனதை
 மட்டுமல்ல
முகத்தையும்
நானறியேன்.